"I am here to teach men what their mothers didn't teach them"
- Renuka Chaudhury (Former Women and Child Development Minister)
August 29, 2007 http://www.rediff.com/news/2007/aug/29men.htm


இளம் மருமகளின் நீண்டநாள் ஆசை நிறைவேறியது

கடந்த சில மாதங்களாக போலிஸ் குடும்பத்தில் இளம் மருமகளாகத் துடித்துக்கொண்டிருந்த ஒரு இளம் பெண்ணிற்கு திருமணம் நடப்பதற்கு முன்பாகவே வரதட்சணைக் கொடுமை ஆரம்பித்திருந்தது. அதனை எதிர்த்து போராடி காதலனையும், அவனது குடும்பத்தையும் சிறைக்கு அனுப்ப அவர் பட்ட பாடு சொல்லி மாளாது. கடைசியில் ஒரு வழியாக காவல்துறை பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து IPS காதலனையும் அவனது குடும்பத்தையும் ஒரு பெரிய குற்ற வழக்குப் பட்டியலில் சேர்த்துவிட்டார்கள்.

இதை இப்படியே விட்டுவிடவும் கூடாது. கடைசிவரை என்ன நடக்கிறது என்று எல்லா மருமகள்களும் கூர்ந்து கவனிக்க வேண்டும். வழக்கை பதிவு செய்துவிட்டோம் என்று கணக்குக் காட்டிவிட்டு பிறகு புலன் விசாரணை செய்கிறோம் என்ற பெயரில் வழக்கை மாற்றிவிடுவார்கள். என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

பின்வரும் வெற்றிச் செய்தியையும் அதில் குறிப்பிட்டுள்ள சட்டப் பிரிவுகளையும் கவனமாக படித்து குறிப்பெடுத்துக் கொள்ளுங்கள்.





சென்னை: ஐ.பி.எஸ்., பயிற்சி அதிகாரி வருண்குமார் மற்றும் அவரின் பெற்றோர் மீது, மத்திய குற்றப்பிரிவு போலீசில், வரதட்சணை கொடுமை உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, ஐ கோர்ட்டில் பிரியதர்ஷிணி தாக்கல் செய்த மனு, தள்ளுபடி செய்யப்பட்டது.

சென்னை, வளசரவாக்கத்தைச் சேர்ந்தவர் பிரியதர்ஷிணி.

ஐ கோர்ட்டில் இவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:

நானும், திருச்சியைச் சேர்ந்த வருண்குமார் என்பவரும், காதலித்தோம். என்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறினார். சிவில் சர்வீஸ் தேர்வில், வருண்குமார் வெற்றி பெற்றார். தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வுக்கு, அவருக்கு நான் உதவினேன்.

சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற பின், வருண் மற்றும் அவரின் பெற்றோரின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டது. இரண்டு கிலோ தங்கம், 50 லட்ச ரூபாய் ரொக்கம் மற்றும் பி.எம்.டபிள்யூ., கார் தந்தால் தான் திருமணம் என கூறினர். போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தேன். மாவட்ட சமூக நலத்துறை விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டது. அவரிடம் இருந்து அறிக்கை பெற்று, என் புகார் மீது நடவடிக்கை எடுக்க, போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு, அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

இம்மனுவை விசாரித்த நீதிபதி நாகமுத்து, "கவுன்சிலிங் அல்லது செட்டில்மென்டுக்கு வாய்ப்பு இருக்கிறதா என்பது குறித்து, வருண்குமார் தரப்பில் மனு தாக்கல் செய்ய வேண்டும். இல்லையெனில், சட்டப்படி விசாரிக்க உத்தரவு பிறப்பிக்கப்படும்' என, கடந்த வாரம் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், இவ்வழக்கு நீதிபதி நாகமுத்து முன், மீண்டும் விசாரணைக்கு வந்தது. பிரியதர்ஷிணி சார்பில், வழக்கறிஞர்கள் எஸ்.பிரபாகரன், செந்தில்குமார் ஆஜராகினர். போலீஸ் தரப்பில், கூடுதல் அரசு குற்றவியல் வழக்கறிஞர் மகாராஜா ஆஜராகி, மனுதாரர் புகார் தொடர்பாக, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது என்றார். இதையடுத்து, மனுவை தள்ளுபடி செய்து, நீதிபதி நாகமுத்து உத்தரவிட்டார்.

பிரியதர்ஷிணி அளித்த புகாரின்படி, சென்னை மத்திய குற்றப்பிரிவில் வருண்குமார், தந்தை வீரசேகரன், தாய் கல்பனா மீது, வரதட்சணை கொடுமை, நம்பிக்கை மோசடி, மிரட்டல் பிரிவுகளின் கீழ், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டப் பிரிவுகளின்கீழும், வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

======

இந்த வீரமான மருமகளின் சமுதாய விழிப்புணர்ச்சி போராட்டத்தைப் பற்றிய முந்தைய செய்தி...


சென்னை : "" ஐ.பி.எஸ்., பயிற்சி அதிகாரி வருணை திருமணம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை. பதவியை வைத்து மிரட்டக் கூடாது என்பதற்காக தான் புகார் அளித்தேன்,'' என்று பிரியதர்ஷிணி தெரிவித்துள்ளார்.

சென்னை, வளசரவாக்கம், கனகதாரா நகர், கிருஷ்ணா தெருவைச் சேர்ந்தவர் கோகுல் சாகர், ஓய்வு பெற்ற டி.எஸ்.பி., இவரது மகள் பிரியதர்ஷினி. திருச்சியைச் சேர்ந்தவர் வருண்குமார், ஐ.பி.எஸ்., பயிற்சி அதிகாரி. இவர்கள் இருவரும், கடந்த 2007ம் ஆண்டு சென்னையில் உள்ள தனியார் ஐ.ஏ.எஸ். அகடமி ஒன்றில் பயிற்சி பெற்றனர். அப்போது இருவருக்கும் இடையில் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. தேர்வுக்காக டில்லி சென்ற போது, வருண் குமார், தன் பெற்றோர் மற்றும் குடும்பத்தினரிடம் பிரியதர்ஷிணியை அறிமுகப்படுத்தினார். அப்போது, அவர்கள் பயிற்சி முடிந்ததும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று உறுதியளித்துள்ளனர்.

அதன் பின், தேர்வு எழுதியதில், வருண் குமார் வெற்றி பெற்று அடுத்த கட்ட தேர்வு எழுதுவதற்காக டில்லி சென்ற போது, பிரியதர்ஷிணியே அவருக்கு பொருளாதார உதவிகளை செய்து வந்தார். டில்லியில் இருவரும் இருந்த போது, தன் மகனை பார்த்துக் கொள்ளுமாறு பிரியதர்ஷிணிக்கு வருணின் தந்தை வீரசேகரன் பலமுறை இ-மெயில் அனுப்பியுள்ளார். பிரதான தேர்வு முடிந்த பின், வருணும் பிரியதர்ஷிணியும் கடந்தாண்டு நவம்பர், சென்னை வந்தனர். அதன் பின், நேர்முகத் தேர்வுக்கு தயாராகினார் வருண். அதற்கும் பல வழிகளில் பிரியதர்ஷிணியே பணம் செலவழித்துள்ளார்.

நேர்முகத் தேர்வுக்காக, தன்னிடம் இருந்த நகைகளை அடகு வைத்து ஒரு லட்சம் ரூபாய் வருணுக்கு கொடுத்தார் பிரியதர்ஷிணி. இந்தாண்டு இறுதியில் இருவருக்கும் திருமணம் செய்வதாகவும் இரு குடும்பத்தினர் பேசினர். இதற்கிடையில், வருண்குமார் ஐ.பி.எஸ்., தேர்வில் வெற்றி பெற்று, பயிற்சிக்குச் சென்ற நிலையில், பிரியதர்ஷிணியை திருமணம் செய்ய வேண்டுமானால் பி.எம்.டபிள்யூ.,கார் மற்றும் 50 லட்சம் ரூபாய் பணம் மற்றும் இரண்டு கிலோ தங்கம் வேண்டும் என வருணின் பெற்றோர் கேட்டுள்ளனர்.

மற்றொருபுறம், பெற்றோரை சம்மதிக்க வைத்து திருமணம் செய்து கொள்வதாக வருண், பிரியதர்ஷினியிடம் கூறியுள்ளார். அதன் பின், வருண் திருமணம் செய்து கொள்ள மறுக்க, பிரியதர்ஷிணி வருணிடம் கேட்ட போது, மிரட்டியுள்ளார். இதுகுறித்து, சென்னை போலீஸ் கமிஷனர் திரிபாதியிடம், சமீபத்தில் பிரியதர்ஷிணி புகார் அளித்தார். புகார் குறித்து, விசாரணை நடத்துமாறு, வடபழனி உதவி கமிஷனருக்கு உத்தரவிடப்பட்டது. இந்நிலையில், நேற்று பகல் பிரியதர்ஷிணி, எழும்பூர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்திருந்தார்.

குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் அபெய்குமார் சிங்கை சந்தித்துவிட்டு வந்த அவர் கூறியதாவது: நான் ஏற்கனவே அளித்த புகாருக்கு தேவையான ஆதாரங்களை சமர்ப்பிப்பதற்காக இங்கு வந்தேன். அவர் தேர்வில் வெற்றி பெற்ற சந்தர்ப்பத்தில், அவரது குடும்பத்தினருடன் நான் இருந்த போட்டோ, கடந்த மாதம் பத்திரிகையில் வெளிவந்துள்ளது. மேலும், அவர் எனக்கு அனுப்பிய எஸ்.எம்.எஸ்., விவரங்களையும் பதிவு செய்து கூடுதல் கமிஷனரிடம் கொடுத்துள்ளேன். நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார். போலீசார் மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது.

வருண்குமார், தற்போது என்னை தெரியாது என்றும், எனது நடத்தையை குறையாகவும் கூறியுள்ளார். பழகி விட்டு, அதன் பின் ஒரு பெண் எதிர்த்தால், அப்பெண்ணைப் பற்றி அவதூறு பேசுகின்றனர். எனக்கு, வருண் குமாரை திருமணம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் இல்லை. தன் பதவியை பயன்படுத்தி, மற்றவர்களை மிரட்டுகிறார். அப்படி இனியாரையும் அவர் மிரட்டக் கூடாது. பிரச்னைகளை பேசி தீர்த்திருக்க வேண்டும். அதை விடுத்து, அவர் எனது உயிருக்கே மிரட்டல் விடுத்ததால் தான் நான் புகார் அளித்தேன். அவர், என்னை தெரியாது என்கிறார். அப்படியானால், அவர் வைத்திருக்கும் மொபைல் எண்ணில் இருந்து எனக்கு," நான் வேறு பெண்களை பற்றி கூறியபோதும் என் பெற்றோர் வேண்டாம் என்றனர். உன்னையும் வேண்டாம் என்கின்றனர். அவர்களை சம்மதிக்க வைப்பேன்' என்று எஸ்.எம்.எஸ்., அனுப்பியுள்ளார். அது எப்படி சாத்தியமாகும். அவரை பழிவாங்க வேண்டி, புகார் அளிக்கவில்லை. விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தவும், அவர் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் தான் புகார் அளித்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

=======

இதுபோல போலிஸ் குடும்பத்தில் மருமகளாகியிருக்கும் மருமகள்களும் அல்லது போலிஸ் துறையைச் சேர்ந்தவரை காதலித்து திருமணம் செய்யலாம் என்று ஆயிரம் கனவுகளோடு இருக்கும் எதிர்கால மருமகள்களும் போலிஸ் துறை சார்ந்த வரதட்சணை சட்டங்களைப் பற்றித் தெரிந்து வைத்திருப்பது நல்லது. அதனை போலிஸ் குடும்பத்திலுள்ள மருமகளுக்குத் தேவையான சில முக்கியமானத் தகவல்கள் என்ற முந்தைய பதிவில் சென்று படித்து குறிப்பெடுத்துக் கொள்ளுங்கள்.

வாழ்த்துக்கள்!!