காக்க காக்க மருமகளே காக்க!

இந்தப் பதிவுகளில் இதுவரை வரதட்சணை தடுப்புச் சட்டங்களைப் பற்றியும் அவற்றை எப்படி பயன்படுத்துவது என்பதைப்பற்றியும் தெரிந்துகொண்ட மருமகள்களுக்கு மேலும் ஒரு நற்செய்தி வந்திருக்கிறது!

வரதட்சணைத் தடுப்புச் சட்டத்தின் முக்கிய பிரிவுகளான 3 மற்றும் 4 வது பிரிவு பற்றி முந்தைய பதிவுகளில் விளக்கியிருந்தேன். மாமியார் கொடுமையால் மறந்துபோன மருமகள்கள் இங்கே சென்று நினைவுபடுத்திக்கொள்ளுங்கள்
-->வரதட்சணை சட்டத்தைப் பயன்படுத்துவது எப்படி - பாடம் 1

இந்த சட்டத்தின் 3-வது பிரிவுப்படி வரதட்சணை கொடுப்பதும் பெற்றுக் கொள்வதும் சட்டப்படி குற்றமாகும். சட்டம் இப்படி இருந்தாலும் நமது அரசாங்கம் மிகவும் பெரிய மனதுடன் இதுவரை வரதட்சணை கொடுத்த எந்த மருமகளையோ அல்லது அவர்களது பெற்றோர்களையோ 3-வது பிரிவுப்படி தண்டித்திருக்கவில்லை.
ஆனால் அதற்கு மாறாக வரதட்சணைப் புகார் என்று வந்தால் சட்டமும் அரசாங்கமும் கணவனையும் அவனது குடும்பத்தையும் மட்டுமே இந்த சட்டங்கள் மூலம் “நன்றாக கவனித்து” வருகிறார்கள். இது எழுதப்படாத சட்டம்.

இவ்வளவு சுதந்திரம் இருந்தாலும் பல
படித்த மருமகள்களுக்கு வரதட்சணை சட்டங்களைப் பயன்படுத்துவதில் சற்று நெருடலான விஷயமாக இருப்பது வரதட்சணை தடுப்புச்சட்டத்தில் உள்ள 3-வது பிரிவாகும். நான் வரதட்சணைக் கொடுத்துத்தான் திருமணம் செய்தேன் என்று புகார் எழுதும்போது சட்டத்தின் 3-வது பிரிவுப்படி கணவனை மட்டும் அரசாங்கம் தண்டிக்கிறதே என்று மருமகள்களின் மனம் வேதனை அடையுமல்லவா. என்ன இருந்தாலும் மருமகள்களுக்கும் மனசாட்சி என்று ஒன்று இருக்கும். அந்த மனசாட்சியும் உறுத்துமல்லவா?

அதனால் இதுபோன்ற நேர்மையான மருமகள்களின் மனஉறுத்தலை உணர்ந்துகொண்ட தேசிய பெண்கள் வாரியம் ஒரு தாய்மை உணர்வுடன் செயல்பட்டு மருமகள்கள் இந்த வரதட்சணை தடுப்புச் சட்டத்தை எந்தவித மனஉறுத்தலும் இல்லாமல் தாராளமாக தடையின்றி பயன்படுத்திக்கொள்ள வசதியாக வரதட்சணை கொடுப்பவர்களுக்கு தண்டனையிலிருந்து விலக்கு அளிக்கவேண்டும் என்ற பெருந்தன்மையான கோரிக்கையை அரசாங்கத்திடம் வைத்திருக்கிறது.

வரதட்சணை கொடுப்பதை சட்டத்தின் மூலம் தடுக்காமல் அதற்குமாறாக வரதட்சணை கொடுப்பதை ஊக்குவிக்கும் விதமாக இருக்கும் இந்த புதிய சட்ட திருத்தம் மூலம் நாட்டில் வரதட்சணையை அறவே ஒழித்துவிடலாம் என்று உறுதியாக நம்புகிறார்கள் நமது தலைவிகள். படித்த பெரிய தலைவிகள் சொல்வதில் ஏதாவது ஒரு உள் அர்த்தம் இருக்கும். இதன் உள்நோக்கத்தை நன்கு ஆராய்ந்து பார்த்தால் அதில் மருமகள்களுக்கு உள்ள ஏராளமான நன்மைகள் உங்களுக்குப்புரியும். தலைவிகள் சொல்வதைக் கேட்டால் மருமகள்களுக்கு என்றும் நன்மைதான்.

அதனால் மருமகள்கள் அனைவரும் இந்த சட்ட திருத்த மசோதாவிற்கு முழு ஆதரவு கொடுத்து இந்த புதிய சட்டத்தை நடைமுறைப்படுத்த உதவவேண்டும். இந்த புதிய சட்டதிருத்தம் நடைமுறைக்கு வந்தால் மருமகள்களின் கரங்கள் மேலும் வலுப்படும். கணவனின் குடும்பத்தில் கொடிகட்டிப் பறக்கலாம். எந்தவிதமான காரியங்களையும் எளிதாக சாதித்துக்கொள்ளலாம். கொடுப்பதுபோலக் கொடுத்து பிறகு அதை வரதட்சணை என்று சொல்லலாம். அல்லது எதுவும் கொடுக்காமலே வரதட்சணை கொடுக்கப்பட்டதாகவும் சொல்லலாம். அணு அளவும் பயப்படவேண்டாம். ஏனென்றால் இந்த சட்டம் நடைமுறைக்கு வந்தால் கணவனுக்கும் அவனது குடும்பத்திற்கும் ஒரு கலக்கம் வந்துவிடும். அதைத் தக்கவிதத்தில் பயன்படுத்தும் முழுக்கட்டுப்பாடும் மருமகள் வசம்தான். பிறகென்ன கவலை.

இப்போது இருக்கும் வரதட்சணை தடுப்புச்சட்டமும் அப்படித்தான் இருக்கிறது. இருந்தாலும் இந்த புதிய சட்ட திருத்தம் நடைமுறைக்கு வந்தால் கணவனும் அவனது குடும்பமும் வரதட்சணை வாங்காமல் திருமணம் செய்திருந்தாலும் இந்த சட்டத்திலிருந்தும், மருமகளிடமிருந்தும் தப்பிக்கவேண்டுமென்றால் இருக்கின்ற ஒரே வழி “காக்க காக்க மருமகளே காக்க” என்று மருமகளைத் தான் தினம் தினம் சுற்றி வரவேண்டும்.

இப்போது மருமகள்களுக்கு இந்த சட்ட திருத்தத்தின் முக்கியத்துவம் புரிந்திருக்கும் என்று நம்புகிறேன். அதுதொடர்பான செய்தியை படித்து மகிழுங்கள்.


====================================================
மார்ச் 25,2010

புதுடில்லி : வரதட்சணை கொடுப்பவர்கள், வாங்குபவர்களுக்கு எதிராக புகார் கொடுத்துவிட்டு, தண்டனையில் இருந்து தப்பலாம் என்ற வகையில், புதிய சட்டதிருத்தம் வர உள்ளது. தற்போதைய வரதட்சணை தடுப்பு சட்டத்தின் கீழ், வரதட்சணை கொடுப்பவர்கள் மற்றும் வாங்குபவர்கள் இருவருக்குமே சமஅளவு தண்டனை வழங்கப்படுகிறது. அதாவது, இருவருக்கும் குறைந்தது ஐந்தாண்டு சிறை தண்டனை மற்றும் 15 ஆயிரம் ரூபாய் அல்லது கொடுக்கும் வரதட்சணையின் மதிப்புக்கு ஈடான அபராதம் ஆகியவற்றில் எது அதிகமோ, அது தண்டனையாக வழங்கப்படும்.

இவ்வாறு சட்டம் இருந்தாலும் மணமகன் மற்றும் மணமகள் வீட்டார் இடையே வரதட்சணை கொடுப்பது மற்றும் வாங்குவது இரண்டுமே வழக்கத்தில் இருந்து கொண்டு தான் இருக்கிறது. இந்த சட்டத்தில் தற்போது திருத்தம் செய்யப்பட உள்ளது.

இதுகுறித்து மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், 'வரதட்சணை தடுப்பு சட்டத்தில் கொண்டு வரப்படும் திருத்தத்தின் படி, மணமகள் வீட்டார், தாங்கள் மணமகன் வீட்டாருக்கு கொடுத்த வரதட்சணை குறித்து போலீசில் புகார் செய்து விட்டு, தண்டனையில் இருந்து தப்பலாம். இதனால், மணமகள் வீட்டாருக்கு எந்த பாதிப்பும் இல்லை' என்றார்.

வரதட்சணை கொடுப்பவர்கள், தானே முன்வந்து புகார் கொடுத்தால், அவர்களை குற்றவாளிகளாக கருதாமல், பாதிக்கப்பட்டவர்களாக பார்க்க, இந்த திருத்தம் முதல் முறையாக வழி வகுத்துள்ளது. மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அமைச்சகம், இந்த சட்டத்திருத்தத்தை விரைவில் கேபினட்டின் ஒப்புதலுக்காக அனுப்ப உள்ளது. கேபினட் ஒப்புதல் வழங்கியதும், பார்லிமென்ட்டில் அறிமுகப்படுத்தப்படும்.


இதுகுறித்து, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அமைச்சக வட்டாரங்கள் கூறுகையில்,'வரதட்சணை தடுப்பு சட்டம் மணமகள் வீட்டாருக்கு எவ்வித சலுகையும் அளிப்பதில்லை என்ற புகார் நீண்ட காலமாக இருந்து வருகிறது. இதனால், மணமகள் வீட்டார், வரதட்சணை தொடர்பான புகார்களை தெரிவிக்க முன் வருவதில்லை. இந்த தடையை நீக்குவதே, இந்த சட்டத்திருத்தத்தின் முக்கிய நோக்கம்' என்றார்.

இதை தவிர மற்றொரு திருத்தமும், இச்சட்டத்தில் மேற்கொள் ளப்பட உள்ளது. அதாவது, மணமகன் அல்லது மணமகள் வீட்டார் தங்களுக்குள் வழங்கும் பரிசு பொருட்களும், தற்போதைய சட்டப்படி வரதட்சணையாக கருதப்படுகிறது. எனவே, இருவீட்டார் இடையே வழங்கப்படும் பரிசுப் பொ ருட்களை பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட உள்ளது; இல்லையென்றால், அதுவும் வரதட்சணையாக கருதப்படும். சமூக நெருக்கடி காரணமாகவே, மணமகள் வீட்டார் வரதட்சணை கொடுக்கின்றனர் என்ற தொடர் விவாதத்தின் காரணமாகவே, இந்த திருத்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன.

======================================================

மருமகள்களுக்கு வெற்றி!!!

வெற்றிகரமாக மருமகள்களின் கூட்டணி இடஒதுக்கீட்டில் வெற்றிபெற்றுவிட்டது. அடுத்தகட்ட நடவடிக்கையாக அனைத்து மருமகள்களும் அரசியல் கடலில் மூழ்கி முத்தெடுக்கத் தயாராகுங்கள்.

இந்த இடஒதுக்கீட்டில் மருமகள் மட்டும் தான் பலனடையப்போகிறார்களா என்று உங்களுக்கு ஒரு சந்தேகம் வரலாம். நியாயமான கேள்விதான். கிழட்டு மாமியார்களை கட்சியில் தேர்வு செய்து தேர்தலில் போட்டியிட அனுமதிகொடுக்க எந்தக் கட்சித்தலைவர் விரும்புவார்? அப்படியே தப்பித்தவறி தேர்தலில் நின்றால் கிழட்டுப் பெண்களுக்கு ஓட்டுப்போடப்போவது யார்? சந்தேகமே இல்லை. கட்சிகளிலும் சரி வாக்காளர்களானாலும் சரி இளம் மருமகள்களை மட்டும் தான் அனைவரும் விரும்புவர். அதனால் மருமகள்களே தேர்தலில் நின்று அரசியல் களம்புக இன்றே தயாராகுங்கள்.

கண்டிப்பாக மருமகள்கள் தான் இனி நாட்டை ஆளப்போகிறார்கள். சட்டசபை நாடாளுமன்றம் இவற்றில் வெற்றிக் கொடி கட்டி கிழட்டு மாமியார் கூட்டத்தையும், கொடுமை செய்யும் கணவர் கூட்டத்தையும் புதுப்புதுச் சட்டங்களை இயற்றி நாட்டை விட்டே விரட்டுவோம்.






மாநிலங்களவையில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேறியதற்கு மகிழ்ச்சி தெரிவிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் பிருந்தா காரத், பாஜக தலைவர்கள் சுஷ்மா
புதுதில்லி, மார்ச் 9: மக்களவை, மாநில சட்டப்பேரவைகளில் மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் அரசமைப்புச் சட்ட திருத்த மசோதா மூன்றில் இரண்டு பங்குக்கும் அதிகமான உறுப்பினர்களின் ஆதரவுடன் செவ்வாய்க்கிழமை மாநிலங்களவையில் நிறைவேறியது. சர்வதேச மகளிர் தினமான மார்ச் 8ம்தேதி (திங்கள்கிழமை) இந்த மசோதாவை நிறைவேற்றுவது என்பதில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி முனைப்புடன் இருந்தது. எனினும் அது நிறைவேறாமல் போகவே அதை எப்படியாவது நிறைவேற்றியாக வேண்டும் என்பதில் உறுதியாக இருந்து அதில் வெற்றி கண்டது ஆளும் கூட்டணி.

மசோதா நிறைவேறியாக வேண்டும் என்பதில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் பிரதமர் மன்மோகன் சிங்கும் முழு முயற்சி மேற்கொண்டனர். இந்த தினம் வரலாற்றுச் சிறப்புமிக்க தினம் என்றும் இந்த மசோதாவால் சிறுபான்மையினருக்கு எந்த பாதிப்பும் வராது என்றும் பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்துள்ளார். தற்போதைய வடிவில் இந்த மசோதாவை நிறைவேற்றினால் கூட்டணி அரசுக்கு வெளியிலிருந்து கொடுத்துவரும் ஆதரவை விலக்கிக் கொள்வோம் என்று முலாயம் சிங்கின் சமாஜவாதி கட்சியும் லாலு பிரசாதின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியும் அறிவித்தபோதிலும் அதைப் பொருட்படுத்தாமல் மசோதா நிறைவேற்ற நடவடிக்கை எடுத்தது ஐக்கிய முற்போக்குக்கூட்டணி அரசு.

மாநிலங்களவையில் மசோதாவுக்கு ஆதரவாக 186 வாக்குகளும் எதிர்த்து 1 வாக்கும் பதிவாகின. சில கட்சிகள் வாக்கெடுப்பை புறக்கணித்தன.தமக்கு முன்கூட்டியே எதையும் தெரிவிக்காமல் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்தாமலே மசோதா மீது வாக்கெடுப்பு நடத்தியதை கண்டித்து திரிணமூல் காங்கிரஸ் கட்சி வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. இக்கட்சிக்கு மாநிலங்களவையில் 2 உறுப்பினர்கள் உள்ளனர்.

மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த 12 உறுப்பினர்களும், தாம் கேட்டுக்கொண்ட திருத்தங்கள் மசோதாவில் இடம்பெறவில்லை என்று எதிர்ப்பு தெரிவித்து வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் வெளிநடப்பு செய்தனர்.1996 முதல் இந்த மசோதாவை நிறைவேற்ற முயற்சி எடுக்கப்பட்டு நிறைவேறாமல் போனது. 14 ஆண்டுக்குப்பிறகு தற்போதுதான் பிரதான எதிர்க்கட்சியான பாஜக, இடதுசாரி கட்சிகளின் ஆதரவுடன் காங்கிரஸ் தலைமையிலான ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் இந்த மசோதா நிறைவேறியுள்ளது.மகளிருக்கு மக்களவை, மாநில சட்டப்பேரவைகளில் 33 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு வகை செய்யும் அரசமைப்பு சட்ட 108வது திருத்த மசோதா திங்கள்கிழமை மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டபோதே சமாஜவாதி, ராஷ்ட்ரீய ஜனதா தளம் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.

ஒரு கட்டத்தில் மாநிலங்களவைத் தலைவர் ஹமீது அன்சாரியின் இருக்கை அருகே சென்று அங்கு இருந்த மசோதா பிரதியை பறித்துக் கிழித்து அன்சாரியை தாக்கவும் முற்பட்டனர்.அவையில் தொடர்ந்து அமளி தொடரவே திங்கள்கிழமை அவை நாள் முழுவதுக்கும் ஒத்திவைக்கப்பட்டது.செவ்வாய்க்கிழமை பிற்பகலில் இந்த மசோதா விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த விவாதத்தில் மாநிலங்களவை எதிர்க்கட்சித்தலைவர் அருண் ஜேட்லி (பாரதிய ஜனதா கட்சி), பிருந்தா காரத் (மார்க்சிஸ்ட்), சதீஷ் மிஸ்ரா (பகுஜன் சமாஜ் கட்சி), ஜெயந்தி நடராஜன் (காங்கிரஸ்) உள்ளிட்டோர் பங்கேற்றுப் பேசினர்.

விவாதத்தை தொடங்கிவைத்து அருண் ஜேட்லி பேசுகையில், மகளிர் மசோதாவுக்கு பாஜக முழு ஆதரவு அளிப்பதாகவும் அதே நேரத்தில் மாநிலங்களவையில் நடந்த வெட்கித்தலைகுனியக் கூடிய சம்பவங்கள் இந்த நல்லதொரு தருணத்தை மழுங்கடித்துவிட்டதாகவும் குறிப்பிட்டார்.இந்த மசோதா மூலமாக தலித்துகள், பழங்குடிகளுக்கு பாதிப்பு வராது. அவர்களுக்கு நியாயமான ஒதுக்கீடு இந்த மசோதா மூலம் கிடைக்கும் என்று ஜெயந்தி நடராஜன் தெரிவித்தார்.முன்னதாக, திங்கள்கிழமை நடந்த அமளியில் தொடர்புடையதாக 7 உறுப்பினர்களை, பட்ஜெட் கூட்டத் தொடரின் எஞ்சிய காலத்துக்கு சஸ்பென்ட் செய்ய அன்சாரி நடவடிக்கை எடுத்தார். அவைத்தலைவர் அன்சாரி விவாதமின்றி மசோதாவை வாக்கெடுப்புக்கு விடுவதாக அறிவித்தார். இந்த நடவடிக்கைக்கு பாஜக, இடதுசாரி உறுப்பினர்கள் ஆட்சேபம் தெரிவித்தனர். முதலில் விவாதம் நடத்தி அதன்பிறகே வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என்று வலியுறுத்தினர்.

இருப்பினும் முதலில் குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேறி அடுத்ததாக மசோதா மீது விவாதம் நடைபெறும் நிலை எப்போதும் இல்லாதவகையில் உருவானது.இந்த மசோதா சிறுபான்மையினருக்கோ அல்லது தலித்துகளுக்கோ எதிரானது அல்ல என்றும் பெண்களுக்கு அதிகாரம் அளிக்கவகை செய்யும் உன்னத நடவடிக்கை என்று பிரதமர் மன்மோகன் வர்ணித்தார்.மசோதாவுக்கு ஆதரவளித்த மாநிலங்களவை எதிர்க்கட்சித்தலைவர் அருண் ஜேட்லி, மற்றும் பிற கட்சிகளுக்கு அவர் பாராட்டு தெரிவித்தார்.

முன்னதாக, மசோதாவை ஒத்திவைத்து அனைத்துக்கட்சி கூட்டம் கூட்டி விவாதிக்கவேண்டும் என்று செவ்வாய்க்கிழமை காலையில் பிரதமர் மன்மோகன் சிங்கை லாலு பிரசாதும் முலாயம் சிங்கும் சந்தித்து கோரிக்கை விடுத்தனர். அதற்கு பிரதமர் சம்மதிக்கவில்லை. இந்த மசோதா நிறைவேறுவதன் மூலம் 545 பேரைக் கொண்ட மக்களவையில் பெண் உறுப்பினர்கள் 181 பேர் இடம்பெறுவார்கள். 28 மாநில சட்டப்பேரவைகளில் மொத்தமுள்ள 4109 இடங்களில் 1370 இடங்கள் பெண்களுக்கு கிடைக்கும்.


மருமகள்களுக்கு நற்செய்தி!



இதுவரை வீட்டில் மட்டும் ஆட்சி செய்துவந்த மருமகள்கள் இனி சட்டசபை, பார்லிமென்ட் என அரசியலிலும் புகுந்து கலக்கலாம். மருமகள்களே இந்த இட ஒதுக்கீட்டிற்கு உங்களின் ஆதரவை முழுமனதுடன் தெரிவியுங்கள். இன்னும் சொல்லப்போனால் 50% இடஒதுக்கீடு கிடைக்க ஏதாவது செய்யமுடியுமா என்று உங்கள் தொகுதி MP-க்களிடமும் தேசிய மகளிர் வாரியத்திடமும் கோரிக்கை வையுங்கள்.

புது தில்லியில் சனிக்கிழமை செய்தியாளர்கள் கூட்டத்தில் கிரிஜா வியாஸ் கூறியது: அனைத்துக் கட்சிகளும் இந்த மசோதாவை ஆதரிக்க வேண்டும் என தேசிய மகளிர் ஆணையம் விரும்புகிறது. இந்த மசோதாவை எதிர்க்கும் கட்சிகள் யோசித்து முடிவுக்கு வர வேண்டும். ஞாயிற்றுக்கிழமை முழுவதும் அவர்களுக்கு அவகாசம் உள்ளது. மகளிர்க்கு அதிகாரத்தில் பங்கு கொடுப்பது மட்டுமே இந்த மசோதாவின் நோக்கம் அல்ல. அதையும் தாண்டி எதிர்கால சந்ததிகளின் நலனுக்காகவும் இந்த மசோதா கொண்டு வரப்படுகிறது. எனவே முக்கியத்துவம் வாய்ந்த இந்த மசோதா நிறைவேற அனைத்து உறுப்பினர்களும் உறுதுணையாக இருக்க வேண்டும்.

இந்த ஒதுக்கீடு எதிர்கால பெண்களின் நலனுக்காக என்று பெண்கள் வாரியத்தலைவி சொல்லியிருக்கிறார். அதனால் 50% இடஒதுக்கீடு கேளுங்கள். உங்களது எதிர்காலத் தோழிகள் பலன் அடையட்டும்.

இந்த இட ஒதுக்கீடு சட்டமாக்கப்பட்டால் எல்லா மருமகள்களும் தைரியமாக அரசியலில் ஈடுபட்டு நாட்டு முன்னேற்றத்திற்குப் பாடுபடலாம். எத்தனை ஆண்டுகள் ஆண்கள் இயற்றும் சட்டங்களைப் பயன்படுத்தவேண்டிய சூழ்நிலையில் பெண்கள் வாழவேண்டும்? பெண்களே பல புதிய சட்டங்களை இயற்றி வரதட்சணைக் கொடுமை செய்யும் கணவர்களை எப்படி அடக்கி ஆளலாம் என்ற புதிய வழிமுறைகளை கண்டுபிடிக்கலாம். நாட்டின் ஆட்சியே மருமகள்களின் கையில் வந்த பிறகு வீட்டில் ஆட்சி செய்வது மிகவும் எளிதாகிவிடும் அல்லவா. அதனால் படித்த மருமகள்கள் முழுமனதுடன் அரசியலில் ஈடுபடவேண்டும். அதற்கு இந்த இடஒதுக்கீடு ஒரு பொன்னான வாய்ப்பு.

இந்த இடஒதுக்கீடு சட்டமாக வந்தாலும் என்னுடைய கணவரோ அல்லது மாமியார் வீட்டிலோ அரசியலில் ஈடுபட விடமாட்டார்கள் என்று நீங்கள் நினைத்தால் அதற்கும் ஒரு வழி இருக்கிறது. அது தான் குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம். மருமகளின் விருப்பத்திற்கு அடிபணியாதவர்களை வழிக்குக் கொண்டுவருவதற்குத்தான் குடும்ப வன்முறை சட்டம் இயற்றியிருக்கிறார்கள். அதனைப் பற்றி அடுத்தப் பதிவில் விரிவாக எழுதுகிறேன். இப்போதைக்கு இந்த செய்தியைப் படித்து சந்தோஷமடையுங்கள்.


புது தில்லி, மார்ச் 7: மக்களவையிலும், மாநில சட்டப் பேரவைகளிலும் பெண்களுக்கு 33 சதவீதம் இடங்களை ஒதுக்க வகை செய்யும் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா மாநிலங்களவையில் திங்கள்கிழமை நிறைவேற்றப்படுகிறது.உலக மகளிர் தினத்தின் 100-வது ஆண்டு நாளில், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.

காங்கிரஸ், பாஜக, இடதுசாரி கட்சிகள், அ.தி.மு.க., தி.மு.க., தெலுங்கு தேசம், தேசியவாத காங்கிரஸ், அகாலி தளம், திரிணமூல் காங்கிரஸ், பிஜு ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் இந்த மசோதாவை ஆதரிக்கின்றன.சமாஜவாதி, ராஷ்ட்ரீய ஜனதா தளம், பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகள் கடுமையாக எதிர்க்கின்றன.

பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், முஸ்லிம்களின் பிரதிநிதித்துவத்தை மேலும் குறைப்பதற்கான சதி இந்த மசோதா என அவர்கள் கருதுகின்றனர். அவர்களுக்கும் பிரதிநிதித்துவம் தர உள் ஒதுக்கீடு தேவை என இக் கட்சிகள் வலியுறுத்துகின்றன.இன்று தாக்கல்: அரசமைப்பு சட்ட 108-வது திருத்த மசோதா என்கிற மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை விவாதத்துக்காக மாநிலங்களவையில் சட்டம் மற்றும் நீதித் துறை அமைச்சர் எம்.வீரப்ப மொய்லி திங்கள்கிழமை தாக்கல் செய்கிறார்.

பிரதான கட்சிகள் இந்த மசோதாவை ஆதரிப்பதால் விவாதத்துக்குப் பின் நடைபெறும் வாக்கெடுப்பில் மசோதா நிறைவேறுவது உறுதியாகிவிட்டது.மாநிலங்களவையில் காலியிடம் நீங்கலாக தற்போது 233 உறுப்பினர்கள் உள்ளனர். அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர குறைந்தது 155 உறுப்பினர்களின் ஆதரவு தேவை.மாநிலங்களவையில் 165 உறுப்பினர்கள் இந்த மசோதாவை ஆதரிக்கின்றனர்.

இவர்கள் தவிர ஐக்கிய ஜனதா தளம் கட்சி எதிர்ப்பு தெரிவித்தபோதிலும், அக் கட்சியைச் சேர்ந்த பிகார் முதல்வர் நிதீஷ் குமார் திடீர் ஆதரவு தெரிவித்துள்ளார்.பேசலாம்- அமைச்சர் பன்சால்: தற்போதைய வடிவில் மகளிர் மசோதாவை அனைவரும் ஆதரிக்க வேண்டும் என நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பவன் குமார் பன்சால் கேட்டுக் கொண்டுள்ளார்.

சட்டம் என்பது தேங்கி நிற்கக் கூடியது அல்ல. மசோதா குறித்து புது வித ஆலோசனைகள் இருந்தால் அது குறித்து பேசி மாற்றங்களை மேற்கொள்ளலாம் என்றார் அவர்.எந்தக் கட்சியும் உரிமை கோர முடியாது- மொய்லி: மகளிர் மசோதா நிறைவேற தாங்கள்தான் காரணம் என எந்தக் கட்சியும் தனி உரிமை கோர முடியாது என மத்திய அமைச்சர் வீரப்ப மொய்லி கூறினார்.மகளிர் மசோதா நிறைவேறுவதற்கான பெருமை அனைத்தும் இந்த நாட்டு மக்களுக்கும், மகளிருக்கும், நாடாளுமன்றத்துக்கும் உரியது என்றார் அவர்.

முஸ்லிம், பிற்படுத்தப்பட்டோருக்கு எதிரான சதி- லாலு, முலாயம்
தற்போது தாக்கல் செய்யப்படும் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா முஸ்லிம், பிற்படுத்தப்பட்டோருக்கு எதிரானது என ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவ், சமாஜவாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.இது குறித்து லாலு மேலும் கூறியதாவது: மகளிர் மசோதா என்பது மாபெரும் அரசியல் பிழை. ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் அறிக்கை, சச்சார் குழு அறிக்கை பரிந்துரைகளை அமல்படுத்த திராணியில்லாத மத்திய அரசு, திசை திருப்பும் செயலாக மகளிர் மசோதாவை எடுத்துக் கொண்டுள்ளது.

சுஷ்மா ஸ்வராஜ் போன்றவர்கள் எம்.பி.யாக தேர்வு பெற இட ஒதுக்கீடு அவசியமா? கொறடா உத்தரவு பிறப்பிக்கவில்லை என்றால், மசோதாவுக்கு எதிராக வாக்களிப்போம் என காங்கிரஸ் மற்றும் பாஜகவைச் சேர்ந்த எம்.பி.க்கள் என்னிடம் தெரிவித்து வருகின்றனர் என்றார் லாலு.முஸ்லிம்கள், தலித்துகள் மக்களவைக்கும், பேரவைகளுக்கும் தேர்வு செய்யப்பட கூடாது என காங்கிரஸýம், பாஜகவும் கூட்டாக சதியில் ஈடுபட்டுள்ளன என்றார் முலாயம் சிங் யாதவ்.

குஜராத், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரம், பஞ்சாப், ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஒரு முஸ்லிம் கூட எம்.பி.யாகத் தேர்வு செய்யப்படவில்லை. நிலைமை இப்படியிருக்கையில் இந்த மாநிலங்களில் இருந்து முஸ்லிம் பெண் எப்படி எம்.பி.யாகத் தேர்வு செய்யப்படுவார் என முலாயம் கேள்வி எழுப்பினார்.மகளிர் மீது உண்மையிலேயே மத்திய அரசுக்கு அக்கறை இருக்குமானால், மத்திய அரசு வேலைவாய்ப்புகளிலும், கல்வியிலும் 50 சதவீதம் இட ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றார் அவர்.

13 ஆண்டு போராட்டம் கடந்த 13 ஆண்டுகளாக இந்த மசோதாவைத் தாக்கல் செய்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. 1997-ல் ஐ.கே.குஜ்ரால் பிரதமராக இருந்த சமயத்தில் முதல்முறையாக இந்த மசோதாவை தாக்கல் செய்ய முயன்றபோது, அவரது சொந்தக் கட்சி (ஜனதா தளம்) எம்.பி.க்களே அவரது கையிலிருந்து மசோதா நகலை பிடுங்கி கிழித்து எறிந்தனர்.பாரதிய ஜனதா தலைமையிலானதேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின்போது, அப்போதைய சட்ட அமைச்சர் ராம் ஜேத்மலானி மகளிர் மசோதாவை தாக்கல் செய்ய முயன்றபோதும் அமளி ஏற்பட்டது.

ஆண் எம்.பி.க்கள் எதிர்ப்பு?
காங்கிரஸýம், பாஜகவும் மசோதாவுக்கு ஆதரவாக வாக்கு அளிக்குமாறு கொறடா உத்தரவைப் பிறப்பித்துள்ளபோதிலும், அனைத்து கட்சிகளிலும் உள்ள பெரும்பாலான ஆண் எம்.பி.க்கள் இந்த மசோதாவுக்கு எதிராக உள்ளதாகக் கூறப்படுகிறது. எனினும், கொறடா உத்தரவை மீறினால் கட்சி நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதால் வேண்டாவெறுப்பாகவே இந்த மசோதாவுக்கு ஆதரவாக வாக்களிப்பார்கள் எனவும் தெரிகிறது.